காரைக்காலில் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொது சுகாதார அவசர நிலையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற சனிபகவான் வீற்றிருக்கும் காரைக்காலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியோடு வந்து சென்ற நிலையில், தற்போது காலரா பயத்தால் பயணத்தை குறைத்துவிட்டனர்.
கடந்த மாதம் அரசு பொது மருத்துவமனைக்கு வாந்தி, பேதி என சில நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். தற்போது தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் குவிய ஆரம்பித்து மருத்துவமனை வளாகம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததுதான் காரணம் என்றும், பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்யாமல் போன பொறுப்பற்ற போக்கால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து, காரைக்காலிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மீன்களை ஏற்றிச் செல்லுகிறபோது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீதியெங்கும் மீன்களின் கழிவு நீர் சிதறுவதாலும், திறந்தவெளியில் உள்ள சாக்கடைகளில் பெருகிவரும் பன்றிகளின் அட்டகாசத்தாலும், நூற்றுக்கணக்கான உணவகங்களில் அழுகிக் கெட்டுப்போன இறைச்சிகளை சமைத்து விற்பனை செய்வதாலும் இத்தகைய நோய்த்தொற்று நகரில் பரவியது என்று கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் விடுதலைகனல் இது குறித்து நம்மிடம், “இன்று வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் 90% சதவிகிதத்தினர் குடிநீரை விலைகொடுத்து வாங்க முடியாத ஏழை மக்கள்தான். பொதுப்பணித்துறை மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திய ஏழை மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக, உடைபட்ட குடிநீர்க் குழாய் சம்பந்தமாக பலமுறை அரசுக்குத் தெரிவித்தும் அலட்சியப்படுத்திவிட்டார்கள். அதன் விளைவு, காரைக்காலில் வரலாற்றில் அழிக்கமுடியாத கறை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.
சமூக ஆர்வலரான சுரேஷிடம் பேசினோம். “கடந்த ஒரு மாதம் முன்பு காரைக்கால்மேடு பகுதியில் வாந்தி, பேதி, காலரா என பலருக்கும் ஏற்பட்டது. குடிநீர்க்குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து, அதனை அறியாமல் பொதுமக்கள் அருந்தியதால்தான் இத்தகைய நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கூறினார்கள். பொதுப்பணித்துறையின் கவனத்திற்கும் இது உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. அப்போதே உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்காது.
ஃபிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போடப்பட்ட குடிநீர் பைப்லைன்தான் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. அது பழுதடைந்திருக்கக் கூடும் என்று புதிய பைப் லைன்களை கடந்த ஐந்தாண்டுகளாகப் பதித்து வந்தார்கள். இந்த புதிய லைன்களுக்கு குடிநீரை மாற்றிக் கொடுத்திருந்தால் தற்போது மக்கள் இந்த அவலத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ரோடு நடுவில் குடிநீர்க் குழாய், அதன் அருகில் சாக்கடை குழாய் என்றுதான் இங்கே இருக்கிறது. சுமார் 1500க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் கூட இன்னமும் எங்கே குழாய் உடைந்து சாக்கடை நீர் கலக்கிறது என்பதை ஆய்வு செய்யாமல், பள்ளிக்கு விடுமுறை விடுவது,144 தடை உத்தரவு போடுவது, மக்கள் நீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வது என இப்படித்தான் செயல்படுகிறார்களே ஒழிய உருப்படியான செயல்பாடு இல்லை. பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் பொழுதை போக்கிவிட்டு மாத சம்பளத்தை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களே ஒழிய, மக்கள் உயிர்காக்கும் உன்னத பணியில் இருக்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து விட்டார்கள். எனவே இதற்குக் காரணமான அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் போதாது; அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தந்தால்தான் அடுத்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு பயமும், பொறுப்பும் இருக்கும்” என்றார் வருத்தத்தோடு.
காரைக்கால் நிலை குறித்து காங்கிரஸ், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பதவியேற்ற பின் முதன்முறையாக முதல்வர் ரங்கசாமி இன்று (05.07.2022) பாதிக்கப்பட்டோரைப் பார்த்து ஆறுதல் சொல்லவும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் காரைக்கால் வந்துள்ளார்.