பிளிங்கிட் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்ததில் இருந்து சொமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 14% சரிந்துள்ளது.
உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை சொமேட்டோ இயக்குநா்கள் குழு அளித்துள்ளது. டெலிவரி செய்யும் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு சொமேட்டோ இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விரைவான வர்த்தக முதலீட்டிற்காக சொமேட்டோ நிர்வாகம் அதிகபட்சமாக 400 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் பிளிங்கிட் நிறுவனத்தை விலைக்கு வாங்க முடிவு செய்ததைத் தொடர்ந்து சொமேட்டோ நிறுவனத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,500 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. குறிப்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சோமாட்டோவின் சந்தை மதிப்பு 8.2 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் சொமேட்டோ நிறுவன பங்குகள் கடந்த வருடத்தை விடவும் சுமார் 3 மடங்கு அதிக நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது. இச்சூழலில் பிளிங்கிட் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதற்கு சில முதலீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதன் காரணமாக சொமேட்டோவின் சந்தை மதிப்பு சரிவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கும் சோமாட்டோவின் இந்த முடிவு சந்தையில் நல்ல போட்டியை ஏற்படுத்தும் என்று கோட்டாக் இன்ஸ்டிடியூட் ஈக்விட்டீஸ் நிறுவன நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்கலாம்: ஃபாரினில் இருக்கும் கணவன் இறந்ததாக கூறி இன்ஷுரன்ஸ் பணத்தை அபேஸ் செய்த மனைவி