மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்துவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வந்தாலும் அதற்கு போதிய பலன் இல்லாமல் இருந்து வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி இருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாளில் மும்பை வந்து ஆளுநரை சந்தித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் படி கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற எம்.எல்.ஏ.க்கள்

சுப்ரீம் கோர்ட்டில் 13 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்புக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான முடிவுக்கு பிறகு ஷிண்டே மும்பை வர இருக்கிறார். இந்நிலையில் சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில், “அஸ்ஸாமில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உடல் மட்டும்தான் திரும்ப வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “அஸ்ஸாமில் தங்கி இருக்கும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆத்மா இறந்துவிட்டது. அவர்களின் உடல் மட்டும்தான் மும்பைக்கு வரும். கவுகாத்தியை விட்டு வெளியில் வரும் போது அவர்கள் இதயத்தில் உயிருடன் இருக்கமாட்டார்கள். கொளுத்தப்பட்ட நெருப்பில் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். ஆத்மா இல்லாத உடல் மட்டும்தான் அஸ்ஸாமில் இருந்து மும்பை வரும். அங்கிருந்து நேராக பிரேத பரிசோதனைக்கு சட்டமன்றத்திற்கு செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து மும்பை பாஜக தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் 16 எம்.எல்.ஏ.க்கள், 5 சட்டமேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையை சமாளிக்க தொண்டர்களை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு சிவசேனா தொண்டர்களிடையே நடக்கும் சண்டையில் தேவையில்லாமல் தலையிடவேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கலவரம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 3-ம் தேதி விமான நிலையத்தை சுற்றி அதிகப்படியான தொண்டர்கள் இருக்கவேண்டும் என்று நிர்வாகிகளிடம் பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டில் பாஜ கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்திரகாந்த் பாட்டீல், அசிஷ் ஷெலார் உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

மகாராஷ்டிரா சட்டமன்றம்

இதில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமைகோரி ஆளுநரை சந்திப்பது தொடர்பாக எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அதற்கு பாஜக இன்னும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறது. `இவ்விவகாரத்தில் பாஜக விட்டுக்கொடுப்பதற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை. தேவேந்திர பட்னாவிஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தன்னை எப்போதும் முதல்வராகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். எனவே அவர் ஒருபோதும் ஷிண்டேயை முதல்வராக்க சம்மதிக்க மாட்டார்’ என்று பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

துணை முதல்வர் பதவி வேண்டுமானால் ஷிண்டேயிக்கு கொடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எப்போது மும்பைக்கு வருவார்கள் என்பது குறித்து அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தீபக் கேசர்கர் அளித்த பேட்டியில், “அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் மூன்று நாள்களில் முடிவு செய்த பிறகு மகாராஷ்டிராவிற்கு வருவோம்” என்று தெரிவித்தார். இதற்கிடையே தற்போதுள்ள சிவசேனா கூட்டணி அரசு இன்னும் 2-3 நாள்கள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.