முன்னாள் மிஸ் பிரேசில் க்ளேசி கொர்ரேயா தொடர் டான்சில் அறுவைசிகிச்சை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
2018ஆம் ஆண்டு ஐக்கிய கண்டங்களின் மிஸ் பிரேசில் பட்டத்தை வென்றவர் 27 வயதான க்ளேசி கொர்ரேயா. இவர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் டான்சில் அறுவைசிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பே பலமுறை இதற்காக அறுவைசிகிச்சை செய்துள்ள கொர்ரேயாவுக்கு ஏப்ரலில் அறுவை சிகிச்சை செய்த 5 நாட்களுக்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில் அங்கேயே உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொர்ரேயாவில் குடும்ப பாஸ்டர் கூறுகையில், ’’இந்த இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளோம். அவர் அற்புதமான ஒரு பெண் மற்றும் அனைவராலும் நேசிக்கப்பட்டவரும் கூட. அவருடைய சிரிப்பை பார்க்காமல் வாழ்பது என்பது அவ்வளவு எளிதல்ல. எங்களுடைய இளவரசியை எடுத்துக்கொள்வதற்கு கடவுள் இந்த நாளை குறித்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அவளை மிகவும் மிஸ் பண்ணுவோம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவளுடைய சிரிப்பால் அவள் ஆகாயத்தை பிரகாசிக்க செய்துகொண்டிருப்பாள். அவள் தனது நோக்கத்தை நிறைவேற்றி, அவளுடைய அன்பை எங்களிடம் விட்டுச் சென்றிருக்கிறாள்’’ என்று கூறியுள்ளார்.
தென்கிழக்கு நகரமான மாகேவைச் சேர்ந்த க்ளேசி கொர்ரேயா ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்தார். சில விருதுகளை பெற்றபின் சமூக ஊடகங்களில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் அவரை 57,000 பேர் ஃபாலோ செய்கின்றனர். அவருடைய இழப்புக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.