காவலர் பயிற்சி பெற்றவர்களை ஆர்டர்லிகளாக நியமிப்பது குற்றம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

image

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

உயர் அதிகாரிகள், அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் எனவும், மக்கள் மத்தியில் காவல்துறை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே கருப்புப் பிலிம் பயன்படுத்துவது, காவல்துறை பெயரை அவர்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல் துறையினரை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளது. இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறிய நீதிபதி, இவை சீரழிவுக்கும் மற்றும் அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்து இருந்தார்.

image

காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு நடவடிக்கை எடுப்பது குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாகவும். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசின் விளக்கம் திருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும் என்றும், படித் தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

image

அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் காவல்துறையின் தற்போதைய அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்

அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றங்கள் அதிகரிக்கவே இவை வாய்ப்பளிக்கும் என எச்சரித்துள்ளார்.

ஊரில் உள்ள கார்களில் இருந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றிவிட்டு காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.