ரோகித் ஷர்மா விளையாடாத போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாஃபர்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் மட்டுமே அடங்கிய டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் வரும் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் அயர்லாந்து தொடருக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ”அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியை வழிநடத்த குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தகுதியானவர். இது ஒரு அருமையான முடிவு. ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவருக்கு கேப்டன் பொறுப்புகளை அவ்வப்போது வழங்க வேண்டும். குறிப்பாக ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் ரோகித் ஷர்மா விளையாடாத போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு முதல் தேர்வாக இருக்க முடியும். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தனது பணிகளை ரசித்துச் செய்கிறார். அதேபோல் தன்னையும் மற்றவர்களையும் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். என்னைக் கேட்டால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு சிறந்த கேப்டன் தேர்வு ஹர்திக் பாண்டியாதான்” என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: அயர்லாந்து டி20 தொடருக்கான அணியில் ரிஷப் ஆப்சென்ட்.. ஹர்திக் பாண்டியா கேப்டன்