ட்விட்டர் நிறுவன ஊழியர்களை எலான் மஸ்க் நேரடியாக சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் ஒப்பந்தம் போட்டார். 44 பில்லியன் டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்குவதாக ஒப்பந்தம் போட்ட நிலையில், எலான் மஸ்க்கிற்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே மறைமுகமான சிக்கல் இருந்து வந்தது.
இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக போடப்பட்ட ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் போலி பயனர் கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் வியாழக்கிழமை அன்று ட்விட்டர் நிறுவன ஊழியர்களை எலான் மஸ்க் நேரடியாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை சந்திக்க இருப்பதாகவும், ஊழியர்களின் நேரடி கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்கலாம்: பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு – ரூ.920 கோடி இழப்பீடாக வழங்க கூகுள் முடிவு!