ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியின் 3வது சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. போட்டியின் 83ஆவது நிமிடத்தில் இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் சமநிலை ஆனது. இதையடுத்து போட்டி நிறைவடைய சில நொடிகள் இருந்த போது இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அப்போது இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை கீழே மோதி தள்ளிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள் பதிலடியில் இறங்கினர். அப்போது இதனை தடுக்க வந்த இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரித் சிங்கை ஆப்கான் வீரர்கள் தாக்கினர். இதையடுத்து இந்திய வீரர்கள் சுற்றி வளைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களை பதிலுக்கு தாக்க முயன்றதால் கால்பந்து மைதானமே சண்டைக் களம் போல் மாறியது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டு நடுவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர். இரு நாட்டு அணி வீரர்கள் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடுவதை இந்திய அணி உறுதி செய்துள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்கலாம்: வேகமெடுக்கும் ரன் மிஷின் ஜோ ரூட்… கோலி, ஸ்மித் சாதனையை சமன் செய்து அசத்தல்