நேபாளத்தின் தாரா ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு, முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள கோவாங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேபாளத்தின் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9N-AET விமானம் பொக்காராவில் இருந்து இன்று காலை 9:55 மணிக்கு புறப்பட்டு, 10:07 மணிக்கு தொடர்பை இழந்ததாக விமான நிலையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி, தாரா ஏர் விமானம், லாம்சே ஆற்றின் முகப்பில், மனபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவம் தரை மற்றும் வான் வழித்தடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த விமானத்தில் இரண்டு ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் மூன்று நேபாள பணியாளர்கள் தவிர, நான்கு பேர் இந்தியர்கள் பயணம் செய்தார்கள் என பயணிகளின் பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டது.
இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்ட தாரா ஏர் விமானம் 9NAET காணாமல் போயுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. எங்களின் அவசர அவசர தொலைபேசி எண்:+977 -9851107021” என்று அறிவித்துள்ளது.