நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் எந்தெந்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பின்னுக்குத் தள்ளி டெல்லி அணி 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதனிடையே ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தெந்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது. 2-வது, 3-வது மற்றும் 4வது இடத்திற்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றன. ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் தலா 16 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே-ஆஃப் செல்வதை உறுதி செய்துவிடும்.
தற்போதைய நிலவரப்படி 4வது இடத்திற்கு டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரு அணிகளும் தலா 14 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் டெல்லி 4-வது இடத்திலும், ஆர்சிபி 5-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளன. டெல்லி தனது கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். ஒருவேளை தோற்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து ப்ளே-ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.
பெங்களூர் தனது கடைசி லீக்கில் வெற்றி பெற்றாலும்கூட ரன்ரேட் அடிப்படையில் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே பெங்களூர் அணி 4-வது இடத்தை உறுதி செய்ய வேண்டுமெனில் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி தோல்வியடையவும் வேண்டும்.
அதேபோல் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே 6-வது மற்றும் 7-வது இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் நேரடியாக பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைவு. அந்த அணிகள் தங்களது கடைசி போட்டியில் வென்றாலும் 14 புள்ளிகளையே பெறும். எனினும் டெல்லி, பெங்களூர் அணிகளின் முடிவுகளை பொறுத்து ப்ளே-ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் அந்த அணிக்கு இன்று நடைபெறும் மும்பை உடனான ஆட்டம் வாழ்வா சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து போகும். வென்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்திருக்க வேண்டியதிருக்கும்.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே ப்ளே-ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. மற்ற அணிகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் 8 அணிகளில் எந்த 3 அணிகள் வேண்டுமானாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையலாம்.
இதையும் படிக்க: ஐபிஎல்: கட்டாய வெற்றியை நோக்கி ஐதராபாத் – இன்று மும்பையுடன் மோதல்