கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜியிடம் திராவிடர் கழகத்தினர், “மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் பட்டினப் பிரவேசத்திற்கு தடைவிதிக்க வேண்டும்” என்று மனு அளிக்க கோட்டாட்சியரும் தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதன்பிறகு இந்த விவகாரத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது. ஜீயர்களும் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. இந்த நிலையில், கடந்த 12 நாள்களுக்கும் மேலாக பெரும் விவாதத்தைக் கிளப்பிய பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்திருந்த தடையைக் கடந்த 8-ம் தேதி தமிழ்நாடு அரசு நீக்கியிருக்கிறது.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீன மடத்தில், உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான 11-ஆம் திருநாளான மே 22-ஆம் தேதி இரவு நடைபெறும் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி, அதாவது ஆதின மடத்தைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும், தருமபுரம் ஆதீனத்தைப் பக்தர்கள் பல்லக்கில் அமர தோளில் தூக்கிச் செல்வர். அந்த நேரத்தில் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்வின் போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகச் சென்னையைச் சேர்ந்த ராஜசிவபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்.”பட்டினப் பிரவேச நிகழ்வுக்குத் தமிழ்நாடு அரசின் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி தருமபுரம் ஆதினம் விண்ணப்பிக்க வேண்டும். ஆதீனம் அளிக்கும் மனுவைப் பரிசீலித்து உரியப் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடுகிறது” எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.