அறிமுக அணியான குஜராத் அணி, மற்றொரு அறிமுக அணியான லக்னோ அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
15-வது சீசன் ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளநிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அறிமுக அணிகளுமே இந்த சீசனில் அபாரமாக விளையாடி, இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முறையே முதல் மற்றும் 2-வது இடத்தில் உள்ளன.
இன்றைய போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவதை உறுதிசெய்யும் என்பதாலும், சம பலம் வாய்ந்ததாலும் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே டாஸ் போடப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி பீல்டிங் செய்தது. கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், இன்று வெற்றிபெறும் முனைப்புடன் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
ஆனால், 2.4 ஓவரில் 5 ரன்கன் எடுத்தநிலையில், சாஹா, மொசின் கான் பந்துவீச்சில், ஆவேஷ் கானிடம் கேட்ச்சாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நிறைவுசெய்தநிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடந்த சில போட்டிகளில் பார்மில் இல்லாமல் தடுமாறி வரும் ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிஇ 13 பந்துகளில் 11 ரன்களே எடுத்தார்.
டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராகுல் தெவாடியா 22 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியநிலையில், மொசின் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
டி காக் 11 ரன்களிலும், கேப்டன் கே.எல். ராகுல் 8 ரன்களிலும், கரண் சர்மா 4 ரன்களிலும் , க்ருணால் பாண்ட்யா 5 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் குஜராத் அணியின் யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தீபக் ஹூடா மற்றும் பதோனி தற்போது களத்தில் உள்ளனர். 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.