இலங்கைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்சவை அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பதவியில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்ச குடும்பத்தினர் பதவியை விட்டு விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கும் பொருட்டு நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, மகிந்த ராஜபக்சவை, அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது இவ்விவகாரம் தொடர்பாக வரும் திங்கள் அன்று தனது முடிவை அறிவிப்பேன் என மகிந்த ராஜபக்ச பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகி விட்டதாக வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.