ஆயுள் காப்பீடு துறையின் ஜாம்பவானாக விளங்கிவரும் எல்ஐசியின் பங்குகளை விலைக்கு வாங்க பொதுமக்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், மற்றும் அந்த மத்திய அரசு நிறுவனத்தின் ஊழியர்கள், புதன்கிழமை காலை முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எல்ஐசி நிறுவனம் நாடு முழுவதும் மிகவும் பிரபலமானது என்பதாலும், தலைமுறைகளாக கோடிக்கணக்கானோர் எல்ஐசி பாலிசிகளை வாங்கி வருவதாலும், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மொத்தமாக பங்குகளை வாங்கும் “நங்கூர முதலீட்டாளர்கள்” 5,620 கோடி ரூபாய் மதிப்புள்ள எல்ஐசி பங்குகளை விலைக்கு வாங்க விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் பெரிய முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட எல்ஐசி,  புதன் முதல் சில்லரை முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

 எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக இருக்கும் என எல்ஐசி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தலைவர் ஆர் குமார் அறிவித்துள்ளார்.  எல்ஐசி பாலிசிதாரர்கள் மாற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு எல்ஐசி பங்குகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும்,   ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய்  தள்ளுபடி எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி பங்குகளை வாங்குவது நல்ல முதலீடு என கருதப்படுவதால்,  இந்த ஐபிஓவுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என கருதப்படுகிறது.

image

எல்ஐசி பங்கு விற்பனையில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்கும்;  15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தள்ளுபடி கிடைப்பதால் எல்ஐசி பாலிசிதாரர்கள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்தபட்சம் 15 பங்குகளுக்கு ஒவ்வொரு முதலீட்டாளரும் விண்ணப்பிக்க வேண்டும் என எல்ஐசி அறிவித்துள்ளது. சென்ற நிதிஆண்டிலேயே எல்ஐசி ஐபிஓவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் தாமதத்தை சந்தித்த இந்த பங்கு விற்பனைக்கான தேதிகள் மற்றும் விவரங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை, விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஐபிஓ மூலம் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பங்கு விற்பனைக்கு பிறகும், எல்ஐசி நிறுவனத்தின் 96.5% பங்குகள் மத்திய அரசிடமே இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி ஐபிஓ குறித்து தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வருடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

image

ஐபிஓ முடிந்தபின் மே 17ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும். சில்லறை முதலீட்டாளர்கள் மே 9-ஆம் தேதி வரை தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும். எல்ஐசி லாபத்தில் இயங்கி வருகிறது மற்றும் ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் இருந்து வருகிறது என்பது தவிர, இந்திய பங்குசந்தையில் எல்ஐசி மிகப்பெரிய முதலீட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வரும் நிலையிலும் எல்ஐசி பங்குகளை வாங்க அதிக எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆகவே பங்குகளில் உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 949 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு நம்புகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.