இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களால் இலங்கையில் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. இதனிடையே, இந்த பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசின் தவறான கொள்கைகள் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஆத்திரமடைந்திருக்கும் மக்களும், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
எனினும், பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சி பெரும்பான்மையை இழக்கும்போது மட்டுமே ராஜினாமா செய்ய முடியும் என்றும் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். தங்களை பதவி விலகுமாறு ஒட்டுமொத்த மக்களும் கோரவில்லை என்றும் ஒரு தரப்பினர் மட்டுமே கூறுவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், எனவே அடுத்த தேர்தலிலும் ஆட்சியமைப்போம் என்றும் ராஜபக்ச தெரிவித்தார்.