டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகியுள்ள நிலையில், ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு $42 மில்லியன் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பராக் அகர்வால். 2013 ஆம் ஆண்டு முதல் பொது நிறுவனமாக செயல்பட்டு வந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன் வசமாக்கினார். நேற்று 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க். இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டரை வாங்கி விட்டார்.
இந்நிலையில், அடுத்து ட்விட்டர் நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று Equilar நிறுவனம் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் ஒரு பங்கின் விலை $54.20 ஆகும். நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் பதவிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு நிறுவனம் இழப்பீடாக 42 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கும் என்று Equilar நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், “ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது” எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்தியர் பராக் அகர்வால் பதவி வகித்துவரும் நிலையில், எலான் மஸ்குடனான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அந்த நிறுவனத்தை யார் வழிநடத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.