நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக்கும், பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேலும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15-வது சீசன் ஐபிஎல் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே நகரில் உள்ள 4 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் 40-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக்கும், பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேலும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, வழக்கம்போல் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் உள்பட அனைவரும் சொதப்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக, இளம் வீரர் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர பெரும் உதவி புரிந்தார்.
இதையடுத்து எளிதான ஸ்கோரை பெங்களூரு அணி எட்டிப்பிடித்து விடும் என எதிர்பார்த்தநிலையில், அந்த அணி வீரர்களும் சொதப்ப இறுதியில் பெங்களூரு அணி விக்கெட்டுகள் அனைத்தையும் 19.3 ஓவரில் பறிகொடுத்து 115 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்தது.
Harshal patel and riyan parag fight from stadium#riyanparag #harshalpatel #ipl #RRVSRCB #rcbvsrr #pune pic.twitter.com/2ICjMqO84O
— Jayesh #Rinku Stan acc (@Jayesh_2009) April 26, 2022
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியபோது, கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் பந்து வீச, ரியான் பராக் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 2 பெரிய சிக்ஸர்கள் அடித்து அந்த ஓவரை துவம்சம் செய்தார். முதல் இன்னிங்ஸ் முடிந்து பிரேக்கிற்கு சென்றபோது , கோபத்தில் இருந்த ஹர்ஷல் பட்டேலும், ரியான் பராக்கும் ஒருத்தருக்கொருத்தர் வார்த்தை மோதலில் சரமாரியாக ஈடுபட்டனர். மேலும் பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜிடமும், ரியான் பராக் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் ராஜஸ்தான் அணியை சேர்ந்த உதவியாளர் மற்றும் வீரர் ஆகியோர் உள்பட சிலர் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஆட்டம் முடிந்ததும், ராஜஸ்தான் அணி வென்ற நிலையில், இரு அணி வீரர்களும் பரஸ்பரமாக கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ஹர்ஷல் பட்டேலிடம் ரியான் பராக் கை கொடுக்க சென்றார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் கையை கொடுக்காமல், ரியான் பராக்கை கடந்து சென்றார்.
One Young Talent Jealous Of Other.
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals @RCBTweets @IPL pic.twitter.com/Sg0Pv2pfSC— JAYAKRISHNA (@ImJK_117) April 27, 2022
தான் பந்து வீசிய ஓவரில், ரியான் பராக் சிக்ஸர்கள் விளாசியதாலேயே கோபம் அடைந்த ஹர்ஷல் பட்டேல் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தாமல் இப்படி செய்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.