திருமலை திருப்பதியில் கடந்த சில நாள்களாகவே மக்கள் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் சர்வ தரிசனம் டிக்கெட்களை மீண்டும் வழங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. சி
ல நாள்களுக்கு முன்பு இலவச தரிசன டிக்கெட்கள் வழங்கும் இடத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பக்தர்களுக்குக் காயம் ஏற்பட்டது. எனவே பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகர்யத்தை நீக்கும் வகையில் தேவஸ்தானம் பக்தர்களை நேரடியாக தரிசனம் செய்ய அனுமதித்தது.
அதனால் நாள் தோறும் 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்துவந்தனர். வார இறுதி நாளான நேற்று அதிகபட்சமாக 75,438 பேர் தரிசனம் செய்தனர். உண்டியல் வசூல் 4 கோடியே 28 லட்சத்தைத் தொட்டது. 29,440 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
இந்நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை சமாளிக்க மீண்டும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் தரிசனத்தைத் தொடங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துவருகிறது. இதற்காக டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்களான அலிபிரி பூதேவி காம்ப்ளெக்ஸ், ஶ்ரீநிவாசம் ரெஸ்ட் ஹவுஸ், கோவிந்த ராஜ சுவாமி சத்திரம் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் பார்வையிட்டு வசதிகளை உறுதிப்படுத்திக்கொண்டனர். அங்கே போதுமான நிழல் கூரைகள் அமைக்கப்பட்டிருப்பதையும் பக்தர்களுக்குத் தேவையான அன்னதானம் மற்றும் குடிநீர் அங்கு கிடைக்கும் என்று உறுதி கூறினர். இதன் மூலம் விரைவிலேயே டைம் ஸ்லாட் புக்கிங் முறை அமுலுக்கு வரும் என்று தெரிகிறது.
சீனியர் சிட்டிசன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு…
சீனியர் சிட்டிசன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மே மாத தரிசன டிக்கெட்களை நாளை (26.04.22) முதல் இணையம் மூலம் (https://tirupatibalaji.ap.gov.in) புக் செய்ய முடியும். நாளை ஏப்ரல் 26-ம் தேதி இதற்கான புக்கிங் காலை 10 மணிக்கு ஓப்பன் ஆகும். தினம் தோறும் ஆயிரம் டிக்கெட்கள் 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்காகவும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒதுக்கப்படும்.
வெள்ளிக்கிழமை தவிர்த்து பிற நாள்களில் இவர்கள் காலை 10 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். வெள்ளிக்கிழமை அன்று மாலை மூன்று மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்கு முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய வரும்போது வயதுச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் மற்றும் நோய் ஏதேனும் உள்ளவர் என்றால் அதற்கான மருத்துவச் சான்றிதழையும் கையோடு கொண்டுவர வேண்டும்.