இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது என அந்த நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூ-டியூப் உள்ளிட்ட செயலிகள் நேற்று நள்ளிரவு முதல் இயங்கவில்லை என்று, சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கு மக்கள் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், நேற்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை (36 மணி நேரத்துக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.