ஜோஸ் பட்லரின் சதத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 26-ம் தேதி முதல், 15-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது லீக் போட்டியான இன்றைய முதல் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகிச் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜோஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆனால், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் ஒரு ரன்கள் எடுத்திருந்தபோது, 2.4 ஓவரில், பும்ராவின் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் ஆகி, தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

image

இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லருடன் கூட்டணி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 ரன்கள் எடுத்தநிலையில், பொல்லார்டு பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய ஹெட்மயரும அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார். தொடர்ந்து மற்ற வீரர்கள் சொதப்பியநிலையில், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி சதமடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

எனினும் கடைசி 3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

image

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 1.5-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித் சர்மா. இதையடுத்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணியின் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். மும்பை அணியின் அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 54 ரன்களும், திலக் வர்மா 61 ரன்களும் எடுத்திருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. அந்த அணியின் சார்பாக சாஹல், சைனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.