பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாட்டின் தேசிய பேரவையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது “வரும் 31-ஆம் தேதி முதல் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 3-ஆம் தேதி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் அரசியல் கட்சி மொத்தம் 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இதில் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக சொல்லி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
342 உறுப்பினர்களை கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 179 உறுப்பினர்களின் துணை கொண்டு ஆட்சி அமைத்தார் இம்ரான் கான்.