கொலை, கொள்ளை என பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன், நெல்லை மாவட்டம் களக்காட்டில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர், நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவுடன், 3 காவலர்கள் டெம்போ வேனில் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் வருவதை அறிந்த நீராவி முருகன் காரில் தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. சினிமா சண்டை காட்சியைப் போல் விரட்டிச் சென்ற காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தபோது, அதில் இருந்து வெளியேறிய முருகன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அப்போது பின் தொடர்ந்து சென்ற உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட மூவரை, நீராவி முருகன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

image

இதனால் அதிர்ச்சியுற்ற இசக்கிராஜா, தனது துப்பாக்கியை எடுத்து நீராவி முருகனை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டுள்ளார். அதில் இடது பக்க மார்பில் குண்டு பாய்ந்த நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீராவி முருகன் தாக்கியதால் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்மண்டல ஐ.ஜி அன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள், பின்னர் மருத்துவமனை சென்று காவலர்களை நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. அன்பு, நீராவி முருகன் தாக்கியபோது தற்காப்புக்காகவே காவல் அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறினார். ரவுடி முருகன், தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், நீராவி முருகன் என அழைக்கப்பட்டார். இவர், 2015 ஆம் ஆண்டு சென்னையின் புறநகர் பகுதியில் நடந்த சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இதனிடையே, என்கவுன்ட்டர் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அறிக்கை நாங்குநேரி நீதிமன்ற நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.