சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகை அருகே, காவல்துறை உதவியுடன், நீர்நாய்கள் பரப்பரப்பான சாலையை கடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெருநகரங்கள் பெரும்பாலும் நெரிசலான மக்கள் தொகையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அங்கு விலங்குகள், காடுகள், நீர்நிலைகளை பெரும்பாலும் காண்பது அரிதாகவே இருக்கும். இந்நிலையில், சிங்கப்பூரில், நீர்நாய்கள் பரப்பான போக்குவரத்து நேரத்தின்போது காவல்துறை உதவியுடன் சாலைகளை கடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகை உள்ள இஸ்தானா அருகே உள்ள சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அங்கு சில நீர்நாய்கள் சாலையை கடக்க முயன்றன. இதையடுத்து உடனடியாக நீர் நாய்கள் சாலைகளை கடக்கும் வகையில், வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டன. இதன்பின்னர் சில நீர் நாய்கள் சாலையை கடந்தநிலையில், ஒன்றிரண்டு நீர்நாய்கள் சாலையை கடக்காமல் விளையாடிக் கொண்டிருந்தன.
பின்னர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் நீர் நாய்களை மிகவும் பொறுமையாக மற்றொருபுறம் நீர் நாய்கள் சாலையை கடக்க உதவினார். பொதுமக்களும், அந்த நேரத்தில் நீர் நாய்களுக்கு வழிவிட்டு சாலை ஓரத்திலே நின்று கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசீன் லூங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நீர் நாய்கள் சாலையை கடக்க உதவிய பொதுமக்கள் மற்றும் காவல்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் நமது நகர்ப்புற சூழலில் பாதுகாப்பாக நம்முடன் இணைந்து வாழ அவைகளுக்கு உதவுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும்நிலையில், நீர்நாய்கள் சாலையை கடக்க உதவிய காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Our local otters have been dropping in on the Istana. Appreciate the care by Istana staff, @nparksbuzz, @SingaporePolice and members of public to help them co-exist with us safely in our urban environment, e.g. crossing the road safely. – LHL https://t.co/H8jGiAmTLB pic.twitter.com/j0lzTZIiyU
— leehsienloong (@leehsienloong) March 11, 2022