ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் கோடிக்கணக்கான டாலர்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் செயல்படும் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்தவர்களின் பட்டியல் கடந்த 2016-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அதிகாரிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக இந்தியாவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பல சொத்து முடக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தில் கிரெடிட் சூய்ஸி என்ற வங்கியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு சில ரகசிய வங்கிக் கணக்கு விவரங்கள் கசிந்தன. அதில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சுமார் 1,400 பேர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்திருக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டன. அந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத் துறையின் முன்னாள் தலைவர் மறைந்த அக்தர் அப்துல் ரஹ்மான் கான் உட்பட பல ராணுவ ஜெனரல்களின் பெயர்களும் வெளியாகி இருக்கின்றன. அவர்கள் அந்த வங்கிகளில் பல கோடி டாலர்களை பதுக்கியுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
1980-களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஊடுருவிய போது, அதற்கு எதிராக போரிட அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் முஜாகிதீன் அமைப்புகளுக்கு ஏராளமான நிதியை வழங்கின. இந்த நிதி தான், அப்போதைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணத்தையே அவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.