திமுகவினர் மிரட்டியதால் காணாமல்போன அதிமுக வேட்பாளரை கண்டுபிடித்துத் தரக்கோரி அதிமுக புகார் அளித்த நிலையில், அதிமுக வேட்பாளர் மருத்துவமனையில் இருப்பதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சுகேந்திரன். இவர் தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவந்த நிலையில், திடீரென நேற்று முதல் காணவில்லை. அமைச்சர் துரைமுருகனின் தூண்டுதலின்பேரால் அவர் மிரட்டப்பட்டதாகவும், அதனால் அவர் காணாமல் போனதாகவும் அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு என்பவர் தேர்தல் பார்வையாளர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் வேட்பாளர் சுகேந்திரன் மருத்துவமனையில் படுத்திப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள சுகேந்திரன், ‘நான் சுகேந்திரன் 11- வது வார்டு அதிமுக வேட்பாளர். திடீரென நேற்று (17.02.2022) இரவு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால் எனது மனைவி மற்றும் மாப்பிள்ளைகளுக்கு போன் செய்ததால் அவர்கள் உடனடியாக வந்து விடியற்காலை 4.30 மணிக்கு என்னை பெங்களூருக்கு அழைச்சுட்டு போயிட்டாங்க.
மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. இப்போ நல்லா இருக்கேன், என்னை யாரும் கடத்தவில்லை. உடல் சுமாராக உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கேன். எந்த பிரச்னையும் இல்லை. நாளை அல்லது நாளை மறுநாள் டிச்சார்ஜ் செய்துவிடுவார்கள்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியதில் இருந்தே வேலூர் மாநகராட்சியில் அதிமுக – திமுக இடையே தொடர் அரசியல் முட்டல் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், பிரசாரத்தின் இறுதி நாளில் திடீரென அதிமுக வேட்பாளரை காணவில்லை என்ற புகாரும், அதற்கு எதிர்மாறாக காணாமல் போனதாக கூறப்படும் அதிமுக வேட்பாளர் வெளியிட்ட வீடியோவுமே வேலூர் மாநகர தேர்தல் களத்தில் இறுதி நேர பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.