எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் பெங்களூர் நகரில் நிறைவடைந்தது. இதில் 67 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 9 இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களும் அடங்குவர். அது தவிர ஏலத்திற்கு முன்பாக மொயின் அலி மற்றும் பட்லர் ஆகியோரும் உள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் தங்கள் வீரர்களை ஐபிஎல் விளையாட அனுமதிக்க கூடாது என சொல்லியுள்ளார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.
“இங்கிலாந்து கிரிக்கெட் தங்கள் வீரர்களை ஐபிஎல் விளையாட அனுமதிக்க கூடாது. ஏனெனில் அது அவர்களது டெஸ்ட் கிரிக்கெட்டை பாதிக்கக்கூடும். அதுவும் டெஸ்ட் சீசனின் தொடக்கத்தில் அவர்கள் விளையாடுவது சரியல்ல. அவர்கள் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதுதான் சரியாக இருக்கும். அங்கிருந்து திறமைவாய்ந்த டெஸ்ட் வீரர்கள் கிடைத்துள்ளனர்” என அவர் சொல்லியுள்ளார். தற்போது அவர் கவுன்டி கிரிக்கெட் அணியான Derbyshire கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
லிவிங்ஸ்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் ஜோர்டான், ஜேசன் ராய், மில்ஸ், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே ஆகிய இங்கிலாந்து வீரர்கள் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளனர். இதில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்கள் சிலர் மட்டுமே ஐபிஎல் விளையாட உள்ளனர். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் நோக்கில் ஐபிஎல் தொடரிலிருந்து ஏலத்திற்கு முன்பாக விலகியது குறிப்பிடத்தக்கது.