எலெக்ட்ரிக் கார் என்பது மிகச்சிறிய சந்தையாக இருந்தாலும் இந்தியாவில் வேகமாக வளரும் சந்தையாக இருக்கிறது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு இறக்குமதி வரி என்பது பெரும் தடையாக இருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விலையின் அடிப்படையில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலருக்கு கீழ் காரின் விலை என்றால் 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும். 40,000 டாலருக்கு மேல் என்றால் 100 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு விதிக்கிறது. இது அனைத்து வகையான கார்களுக்கும் பொருந்தும்.
ஆனால் நாங்கள் தயாரிப்பது எலெக்ட்ரிக் கார். ஐசிஇ இன்ஜின் உள்ள கார்களுக்கும் எலெக்ட்ரிக் கார்களுக்கும் ஒரே மாதிரியான இறக்குமதி வரி விதிப்பு ஏற்புடையதல்ல என வாதாடுகிறது. ஆனால், இந்த வாதத்தை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும் மத்திய அரசு இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பான யோசனையை பரிந்துரை செய்தது. ஆனால், அதனை டெஸ்லா ஏற்கவில்லை. காரணம் எவ்வளவு சந்தையை இந்தியாவில் பிடிக்க முடியும் என்பதில் தெளிவில்லாமல் முதலீடு செய்வது சாத்தியமில்லை என்னும் திட்டத்தில் டெஸ்லா இருக்கிறது. அதே சமயம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்னும் பேச்சு வார்த்தையையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் 50 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் உதிரி பாகங்கள் வாங்குவதாக உறுதி அளிக்கும் பட்சத்தில் இறக்குமதி வரி சலுகையை பரிசீலனை செய்ய முடியும் என மத்திய அரசு டெஸ்லாவிடம் கூறியிருப்பதாக புளும்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் 10 கோடி டாலர் அளவிலான உதிரி பாகங்களை ஆண்டுக்கு வாங்குவதாக டெஸ்லா உறுதியளித்திருக்கிறது. ஆனால் 50 கோடி டாலருக்கு உத்தரவாதத்தை மத்திய அரசு கேட்கிறது.
உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிளி செய்யும் பட்சத்தில் 15-30 சதவீத வரி விதிப்பு முறை இருக்கிறது. இந்தியாவில் ஆலை அமைக்க தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெஸ்லா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை ஆட்டோமொபைல் துறை கவனித்துவருகிறது.