உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கி, முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள அத்திகுல்லாபூர் கிராமம் அருகே நேற்று மாலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகெல்லின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகெல் கூறும் போது, “நான் தேர்தல் பிரசாரம் முடித்து கப்ராய்யிலிருந்து அத்திகுல்லாபூர் வழியாக கர்ஹாலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, நடுவழியில் திடீரென சிலர் வயல்வெளியிலிருந்து வெளியே வந்து தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் தடிகள் மற்றும் இரும்பு கம்பிகள் இருந்தன. அவர்களில் ஒருவன் இன்னொருவனின் பெயரை அழைத்து ‘இன்று அமைச்சரை விடக்கூடாது’ எனக் கூறினான்.
அந்த பெயர் உமா காந்த் யாதவ் என்று நினைக்கிறேன். மேலும், `நீங்கள் எங்கள் தலைவருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்’ என்று கூறிக்கொண்டே தாக்கத் தொடங்கினர். எனது பாதுகாப்பு வீரர்கள் வாகனத்தில் இருந்து இறங்கியதும், தாக்குதல் நடத்தியவர்கள் ஓடினார்கள். அவர்களில் ஒருவன் எனது பாதுகாப்பு வாகனம் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மெயின்புரி காவல்துறை அளித்த தகவலில், “அமைச்சர் சத்ய பால் சிங் பாகெல்லின் பாதுகாப்பு வாகனம் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அமைச்சர் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்திருந்தது.
மேலும், இது குறித்து உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, “மெய்ன்புரியின் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேலின் வாகனத்தின் மீது சமாஜ்வாதி கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதல் அக்கட்சியின் உண்மையான தன்மையைக் காட்டுகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பாஜக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சத்ய பால் சிங் பாகெல்லும் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர்களாவர்.