உக்ரைனில் போர் பதற்றம் இன்னும் குறையவில்லை எனக் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனை ரஷ்யா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன எனவும் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் நேட்டோ கூட்டணியில் அதன் அண்டை நாடான உக்ரைன் இணையக் கூடும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, உக்ரைனுக்கு அருகில் அமைந்திருக்கும் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா சில நாட்களுக்கு முன்பு போர் பயிற்சியை தொடங்கியது. மேலும், உக்ரைன் எல்லைப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் ரஷ்யா குவித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை ரஷ்யா தாக்கும் என்கின்ற சூழல் எழுந்தது.

image

இதன் தொடர்ச்சியாக, உக்ரைனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதே சமயத்தில், அமெரிக்காவும், நேட்டோ கூட்டணி நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயத்தமாகின. இதன் காரணமாக, உக்ரைனில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த தனது ராணுவ வீரர்களின் பெரும் பகுதியினரை ரஷ்யா நேற்று திரும்ப அழைத்துக் கொண்டது. இதனை உக்ரைன் அதிபரும் உறுதி செய்தார். எனவே, ரஷ்ய பிராந்தியத்தில் போர் மூளாது எனக் கருதப்பட்டது.

image

ரஷ்யாவை நம்ப முடியாது – ஜோ பைடன்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் இன்று காலை தோன்றி உரையாற்றினார். அப்போது அவர், “உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கப்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. ஆனால், அமெரிக்க உளவுத்துறை அதை இன்னும் உறுதி செய்யவில்லை. ரஷ்யாவை நம்மால் நம்ப முடியாது. எந்த நேரத்திலும் உக்ரைனை ரஷ்யா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால், மிகப்பெரிய விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும்” என ஜோ பிடன் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.