“தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழகத்தில் சாலைகளை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும்” என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த நிலையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தமிழக அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழகத்தில் சாலைகளை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும். நிதி ஒதுக்கீட்டில் எந்த பற்றாக்குறையும் இல்லை. சொல்லப்போனால் தமிழகத்தில் சாலை பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க தயாராக இருக்கிறோம். அந்தவகையில் தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் தான் தமிழகத்திலே சாலை அமைக்கும் பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றது.
உதாரணத்துக்கு தமிழகத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் இருந்தாலும், முதல்வர் பினராயி விஜயன் ஆர்வத்துடன் நடவடிக்கைகளில் எடுப்பதால் அந்த மாநிலத்தில் சாலைகளை அமைக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோல ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு சாலை அமைக்கும் திட்டங்கள் விரைவாக செயல்படுகிறது. தமிழகத்தில் அது கிடைக்கவில்லை. மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால், தமிழகத்தில் பல நெடுஞ்சாலை திட்டங்களை ஒதுக்க முடியும்” என கூறி தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் பேசுகையில், “தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இவ்விஷயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒத்துழைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் மத்திய அமைச்சர் பேசுகையில், கட்டுமானப் பொருட்களை கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதற்கான அனுமதிகள் குறுகிய காலத்துக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது எனவும் கூறினார். தற்போதைக்கு சென்னை-ஹைதெராபாத் நெடுஞ்சாலை காண பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக நிதின் கட்கரி தெரிவித்தார். “நான் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகம் தொடர்பான பல திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டன. மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனவும் அவர் பேசினார்.
இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தமிழக அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நீரஜ்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடன் தமிழக அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்திய செய்தி: ஓட்டிப்பார்ப்பதாக கூறி ’புல்லட்’ வண்டியுடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி! சினிமா பாணியில் சேலத்தில் நிகழ்ந்த சம்பவம்