உக்ரைனில் ரஷ்ய ஆதரவு ஆட்சியை நிறுவ முயற்சி நடப்பதாக இங்கிலாந்து குற்றஞ்சாட்டி உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ரஷ்யப்படை வீரர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இருநாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் தற்போது உள்ள ஆட்சியை அகற்றிவிட்டு, தனது ஆதரவு நிர்வாகத்தை நிறுவ ரஷ்யா முயல்வதாக இங்கிலாந்து குற்றஞ்சாட்டி உள்ளது. உக்ரைனில் உள்ள நாஷி என்ற ரஷ்ய ஆதரவுக் கட்சியின் தலைவர் முரயேவ் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்த புடின் நிர்வாகம் முயன்று வருவதாக இங்கிலாந்து கூறியிருக்கிறது. உக்ரைன் அரசியல்வாதிகள் சிலர் ரஷ்ய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இதற்கு எவ்வித ஆதாரத்தையும் வெளியிடாத இங்கிலாந்து, தங்களது நாட்டு உளவுத்துறை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இங்கிலாந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.