இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் ஐந்து புலிகள் காப்பகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், மொத்த புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 56 அதிகரிக்க உள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகையால் காடுகளை அழித்தல், பணத்துக்காக வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் புலிகள் இனம் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துவந்த நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகள் புலிகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் புலிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 இடங்களில் புலிகள் காப்பக அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கர்நாடகா மாநிலம் எம்.எம். மலைப்பகுதி, சட்டீஸ்கர் மாநிலம் குரு காசிதாஸ் தேசிய பூங்கா, ராஜஸ்தான் மாநிலம் ராம்கார்க் விஸ்தாரி ஆகிய 3 இடங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திபங் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் வனவிலங்குகள் சரணலாயம் ஆகிய இரண்டு இடங்களில் புலிகள் காப்பகம் அமைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “மூன்று இடங்கள் ஏற்கனவே மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இப்போது இந்தப் பகுதிகளை புலிகள் காப்பங்களாக முறையாக அறிவிக்க வேண்டும். மறுபுறம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ன் கீழ் மாநிலங்களிடமிருந்து விரிவான முன்மொழிவுகளைக் கோரி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இரண்டு இடங்களுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலைத் தெரிவித்தது” என்று கூறியுள்ளார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், அந்த முன்மொழிவை உரியக் காலத்திற்குப் பிறகு மாநிலத்திற்கு பரிந்துரைக்கிறது. இதுவரை மொத்தம் உள்ள 51 புலிகள் காப்பகங்களும் சேர்த்து 73,765 சதுர கி.மீ. பரப்பளவில் இருக்கின்றன. மேலும்இ அந்த அதிகாரி கூறுகையில், “ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெறவுள்ள உலகளாவிய புலிகள் உச்சி மாநாட்டிற்கு முன், ஐந்து புதிய இடங்களும் முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக” அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற புலிகள் பாதுகாப்பு தொடர்பான 4-வது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பதற்கான இலக்கு 2022-ம் வருடமாக இருந்தாலுட், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2018-ம் ஆண்டிலேயே இந்தியா புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி வெற்றி அடைந்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.