கொரோனா ஆரம்பித்தபோது மாஸ்க் அணிய வலியுறுத்திய போது N 95 மாஸ்க் தேவையில்லை, அது மருத்துவர்களுக்கானது என்றார்கள். அதேபோல வால்வ் வைத்த மாஸ்க்கும் ஆபத்தானது என்றார்கள். இப்போது N95 மாஸ்க்தான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? இரண்டு மாஸ்க் அணிவது பாதுகாப்பளிக்குமா?
– நவின் (விகடன் இணையத்த்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
“கொரோனா பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களைக் கடந்துவிட்டோம். அதன் பரவும் தன்மை, வீரியம், சிகிச்சை என ஒவ்வொரு தகவலாக வரவர, நமக்கும் அவை குறித்த தெளிவு வருகிறது. ஆரம்பகாலத்தில் கோவிட் தொற்றின் முதல் அலையில், அது ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் சுவாசத்திவலைகள் மூலம் அடுத்தவருக்குப் பரவுகிறது என்று சொல்லப்பட்டது. அதனால்தான் வீட்டுக்குள் இருப்போரும், சாதாரண வேலைகள் பார்ப்போரும் துணி மாஸ்க் அணிந்தாலே போதுமானது என்றும், மருத்துவத்துறையில் இருப்போருக்கு தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகம் என்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக N95 மாஸ்க் உபயோகிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
Also Read: Doctor Vikatan: பனிக்காலத்தில் படுத்தும் தும்மல், தலைபாரம்; வீட்டு சிகிச்சை உதவுமா?
வால்வ் வைத்த மாஸ்க் அணிபவர்கள் வெளியேற்றும் சுவாசக்காற்றானது வடிகட்டி அனுப்பப்படுவதில்லை. வால்வ் வைத்த மாஸ்க் அணிபவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும், அவர்களுக்கு அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு அது ஆபத்தானது என்பதால் அந்த மாஸ்க் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது.
இப்போது மீண்டும் N95 மாஸ்க் அணிய வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒருவர் இருமிய பிறகும் தும்மிய பிறகும் அந்தச் சூழலில் உள்ள காற்றில் வைரஸ் கிருமியானது குறிப்பிட்ட நேரம் வரை வீரியத்துடன் இருப்பது உறுதியாகியிருக்கிறது.
Also Read: Doctor Vikatan: கொரோனா வராமல் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?
அந்தக் காற்றை சுவாசிப்போருக்கும் தொற்று பரவலாம் என்று சொல்லப்படுகிறது. அதைவைத்துப் பார்க்கும்போது N95 மாஸ்க் சிறந்த பாதுகாப்பளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை N95 மாஸ்க் அணிய முடியாதவர்கள், துணி மாஸ்க் அணிந்துகொண்டு, அதற்குமேல் மூன்றடுக்கு சர்ஜிகல் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். இப்படி இரண்டு மாஸ்க் அணிவதும் பாதுகாப்பளிக்கும்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?