இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த நிதி பரிமாற்ற தளமான ‘பாரத் பே’-வின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் நீண்ட கால விடுப்பில் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடாக் குழும ஊழியரிடம் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான ஆடியோ கிளிப்பும் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் மார்ச் இறுதி வரையில் கட்டாய விடுப்பில் சென்றுள்ளதாக பாரத் பே நிறுவனம் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. அவரது பணிகளை பாரத் பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸூஹைல் சமீர் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு அவரது விடுப்பை பாரத் பே நிர்வாக வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளதாம். அதோடு இது நிறுவனம், ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான வணிகர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதாக பாரத் பே தெரிவித்துள்ளது.