பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் மற்றும் பெங்களூரில் இருந்து புவனேஷ்வர் செல்லும் விமானம் ஆகியவை ஒரே நேரத்தில் ஒரே திசையில் புறப்பட்டதால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் 6E-455 மற்றும் பெங்களூரில் இருந்து புவனேஷ்வர்செல்லும் விமானம் 6E 246 ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில்,ஒரே திசையில் அருகருகே அமைந்த ஓடுபாதைகளில் இருந்து புறப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வகையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்தன.
இந்த சூழலில் விமான நிலையத்தில் உள்ள வான்வெளியை உன்னிப்பாகக் கண்காணிக்கும் ரேடார் எச்சரித்த காரணத்தால் இரண்டு இண்டிகோ ஜெட்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பத்திரமாக தப்பித்தனர் . அப்ரோச் ரேடார் கன்ட்ரோலராக உள்ள 42 வயதான லோகேந்திர சிங், விமானங்களை திசைதிருப்பி, நடுவானில் மோதுவதைத் தவிர்த்தார் என்று டிஜிசிஏவின் ஆரம்பகட்ட அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவம் நடந்தபோது இரண்டு ஜெட்களும் 3,000 அடி உயரத்தில் இருந்தது.
பெங்களூரு விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. முன்னதாக, இரண்டு ஓடுபாதைகளும் பயன்பாட்டில் இருந்தன. வடக்கு ஓடுபாதை புறப்படுவதற்காகவும், தெற்கு ஓடுபாதை வருகைக்காகவும் இருந்தது.
ஆனால், ஜனவரி 7ஆம் தேதி காலை முக்கிய தவறுகள் செய்யப்பட்டன. ஒரு ஷிப்ட் இன்சார்ஜ் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரு செயல்பாடுகளுக்கும் வடக்கு ஓடுபாதையைப் பயன்படுத்த முடிவு செய்தார். ஆனால் இதுகுறித்து தெற்கு ஓடுபாதை கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தெற்கு ஓடுபாதையின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் 6E 455 விமானத்தை புறப்பட செய்தார். அதே நேரத்தில் வடக்கு ஓடுபாதை கட்டுப்பாட்டாளர் 6E 246 விமானத்தையும் புறப்பட செய்தார். அதன்பின்னர் ரேடார் ஆப்பரேட்டர் மூலமாக இந்த மிகப்பெரிய ஆபத்து கண்டறியப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
பெங்களூரு-கொல்கத்தா விமானத்தில் 176 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களும், பெங்களூரு-புவனேஸ்வர் விமானத்தில் 238 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என விமானங்களிலும் மொத்தம் 426 பயணிகள் இருந்தனர்.