ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்ற நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் திருப்பி அனுப்பப்பட உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடப்பு சாம்பியனான செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை அவர் சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.
தடுப்பூசி செலுத்துவதிலிருந்து அவருக்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் சம்மேளனம் விலக்கு அளித்திருந்த போதிலும், விலக்கு கோரும் விசாவை ஜோகோவிச் தரப்பு விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்த தான் தகுதியான நபர் அல்ல என மருத்துவரிடம் பெற்ற சான்றிதழ்களை சமர்பித்த போதிலும், அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் பல மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருக்கும் ஜோகோவிச், மீண்டும் செர்பியா திரும்ப உள்ளார்.
9 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், கடந்த ஆண்டு தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.