தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காகத் தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று தி.மு.க-வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிருந்தனர். கடந்த இரண்டு முறையும் நேரில் சென்றபோது, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறை நேரில் சென்றும் கடைசி நேரத்தில் சந்திக்க முடியாது என்று அனுமதி தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்கு, தமிழக ஆளுநர்தான் பொறுப்பு. இதற்காக ஆளுநர் பதவி விலக வேண்டும். அரசியல் காரணங்களுக்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களைச் சந்திக்க மறுக்கிறார் என்று நினைக்கிறேன். ஆளுநர் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவருகிறார். அடுத்ததாக இந்தக் குழு உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று பேசினார்.
மேலும், “ஆளுநர் நாங்கள் எழுதிக்கொடுத்த உரையைப் பேசியிருக்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் அவர் போதிய அக்கறை காட்டவில்லை. காலம் தாழ்த்துவது அவரின் பிரதான நோக்கமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். பின்னர், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்று தமிழகச் சட்டமன்றம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், டி.ஆர்.பாலு இப்படிப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: நீட் தேர்வு விவகாரம்: “தமிழக ஆளுநர் பதவி விலகவேண்டும்!” – டி.ஆர்.பாலு