சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரம்நகர், வேணுகோபால் நகர், சீனிவாசபுரம், தனலட்சுமி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசியத் தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்துவருகிறார்கள்.
தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீரில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக இந்த பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து மழைநீரை அகற்ற உத்தரவிட்டிருந்தார். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்தநிலையில், மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.