புதுச்சேரியில் கொட்டும் மழையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் தயாராகி வரும் நிலையில், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி ஆனந்த மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை உள்ளதால், பலரும் புதுச்சேரிக்கு படையெடுக்கின்றனர். இதனையொட்டி புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
கடற்கரைகள் மற்றும் கடற்கரை சாலைகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை சாலையில் 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 22 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், 4 ஆளில்லா கேமிராக்கள் மூலமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் புதுச்சேரி அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகளை மதுபான கடைகள், நட்சத்திர விடுதிகள், மதுபான விடுதிகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.