கொரோனா வைரஸின் புதிய வடிவான ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் வரும் 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகவுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் நோய் தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது கர்நாடகாவிலும் வரும் 28 ஆம் தேதி முதல் ஒமைக்ரானை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலாகவுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பத்து நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் கூட்டமாக ஒன்று சேர்வதை தடுக்கும் வகையில், சில புதிய கட்டுப்பாடுகளையும் கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி புத்தாண்டில் நடத்தப்படும் இரவு நேர இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகள், கேளிக்கை விடுதிகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் பரவல்: மத்திய பிரதேசத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு