பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்று பேராசிரியருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் குழுவினர் தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கள ஆய்வு செய்தபோது இத்தொல்லியல் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாறை ஓவியம்

இது குறித்து உதவி பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறும்போது, “தென்தமிழகத்திலிருந்து சேர நாட்டிற்கு முக்கிய வணிகப் பாதையாக இருந்த ஊர் தே.கல்லுப்பட்டி. இங்கு வரலாற்று சிறப்புமிக்க தேவன்குறிச்சி மலை உச்சிப்பகுதியில் மிக நீண்ட 15 அடி நீளம், 4 அடி அகல நுழைவு வாயில் கொண்ட குகையும், குகையின் உட்புறங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் அழிந்த நிலையிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்தற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இக்குகை காலப்போக்கில் நீரோட்டத்தால் அழிந்த நிலையில் காணப்படுவதால் தற்போது இக்குகை, `பொந்து பாறை’ என அழைக்கப்படுகிறது.

ஆதிகால மனிதர்கள் தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்கள் மற்றும் தாங்கள் கண்ட காட்சிகளை செஞ்சாந்து மற்றும் வெண்சாந்து மூலம் ஓவியங்கள் குறியீடுகளை பாறைகளில் வரைந்தனர். செஞ்சாந்து ஓவியம் காலத்தால் முற்பட்டது. வெண்சாந்து ஓவியம் என்பது வெப்பாழை என்ற மரத்திலிருந்து பால் எடுத்து இயற்கையாக கிடைக்கும் சுண்ணாம்பு கல் தோய்த்து இரண்டையும் கலந்து, விரல் மூலம் பாறையில் தீட்டப்படுவது.

கல் படுக்கை

பாறை ஓவியங்கள் மூன்று கோணங்களில் வரையப்பட்டிருக்கும். பெரும்பாலும் விலங்கு உருவம் பக்கவாட்டு கோணத்திலும், மனித உருவம் நேர்க்கோட்டு கோணத்திலும் மீன் மற்றும் ஊர்வனவை பறவை கோணத்திலும் வரையப்பட்டு இருக்கும். இப்பகுதியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்களில் வேட்டையாடுதல் போன்ற காட்சியும் நீண்ட கழுத்து கொண்ட விலங்கு, குச்சி வடிவத்தில் மனிதன் நடனமாடும் காட்சி மற்றும் குறியீடுகள் போன்றவை வரையப்பட்டுள்ளது. இதன் காலம் 3000 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கும்.

மலையின் தென்மேற்கு பகுதியில் 2 அடி அகலம் 5 அடி நீளம் கொண்ட மூன்று கற்படுக்கைகள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கற்படுக்கை அருகே மழை நீர் வழிந்தோட குகை வாயிலின் தரை தளத்தில் சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு வெட்டப்பட்டிருக்கிறது. குகையின் மேல் பகுதி சிதைந்து காணப்படுகிறது.

சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்குகை தற்போது பஞ்சு மெத்தை பாறை என்று அழைக்கப்படுகிறது. இதன் காலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதலாம்.

குகையில் ஆய்வு

மலையின் தரைத்தளத்திலிருந்து 5 அடி உயரத்தில் 3 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட பாறைக்கீறல் ஓவியம் முற்றிலும் இரும்பு உளியால் செதுக்கப்பட்டுள்ளது.

17, 25, 30 என்ற எண்ணிக்கையில் கோடுகள் தோரணை வாயிலாக மூன்று அடுக்கில் வரையப்பட்டுள்ளது. பாறைக்கீறலின் இடதுபுறத்தில் மனிதனின் உருவம் கொண்ட மிருக தலையோடு இரண்டு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சரிந்த கொண்டையுடன் பெண்ணின் உருவம் வட்ட வடிவத்தில் ஆடை அணிந்து நடனமாடும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வகை பாறைக்கீறல் தமிழத்தில் கிருஷ்ணகிரி, பெருமுக்கல் தண்டாரம்பட்டு போன்ற குறிப்பிட்ட இடங்களில் கண்டறியப்பட்டது.

தேவன்குறிச்சி மலையில் கண்டறியப்பட்ட பாறைக்கீறல் வரலாற்றின் முக்கியமான மைல் கல்லாகும். இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறையால் 1947, 1958, 1976 போன்ற வருடங்களில் நடத்திய அகழாய்வியல் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தி கற்கருவிகள், கைகக்கோடாரி, நுண்கற்கால கருவிகள், பெருங்கற்கால நினைவு சின்னம், முதுமக்கள் தாழி மண்பாண்டங்கள், கல்மணிகள், கிளிஞ்சல், வளையல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன” என்றார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.