எல்லா வீடுகளிலும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுதல், துவைத்தல், பெருக்குதல்… என வீட்டு வேலைகளை தினந்தோறும் ரிப்பீட் மோடில் செய்வது உண்டு. இருந்தாலும் இந்த பணிகளை ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கேரள அரசு இந்த பணிகளை ஆண்களும் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளதாம்.
இதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளதாம் மலையாள தேசத்து அரசு. ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை அந்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னெடுத்துள்ளதாம். அதன் கீழ் தான் ஆண்களுக்கு வீட்டு வேலைகளை மேற்கொள்வதற்கான செயல்முறை பயிற்சியை மாநிலம் முழுவதும் கொடுக்க உள்ளதாம் அரசு.
குறிப்பாக சமையல் வேலைகளை மேற்கொள்ள அனுபவம் வாய்ந்த சமையல் கலை வல்லுனர்கள் ஆண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி கொடுக்க உள்ளனராம். வீட்டுக்கு தேவையான பண்ட பாத்திரங்களை வாங்கவும் அரசு வட்டியில்லா கடன் கொடுக்க உள்ளதாம். இந்த கடன் கணவன் மற்றும் மனைவியின் பெயரில் வழங்கப்படுமாம். அதே போல இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்படுகிறதாம்.