குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விமானப்படை அதிகாரி மன்வேந்திர சிங் விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல தமிழ்நாடு காவல்துறை சார்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கூடுதல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த மற்ற ராணு வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போதுவரை இரு வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி இன்றுடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.