ஹெலிகாப்டர் விபத்து… ராணுவ அதிகாரிக்கு இறுதிச்சடங்கு!
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரி லிட்டெர் உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர். ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கி நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ஒரு அதிகாரிக்கு மட்டும் பெங்களூருவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பிபின் ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
இன்று பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை செய்யப்படவுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பிரிகேடியர் லிட்டெருக்கு இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஹரியானா முதல்வர் இறுதி மரியாதை செலுத்தினார்!