உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபுவான ஒமைக்ரான். கடந்த மாதம் 25-ஆம் தேதி இந்த திரிபு தென்னாப்பிரிக்க நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அப்போது முதலே உலக நாடுகள் இந்த வகை தொற்று பரவலை தடுக்க பல்வேறு வழிகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் அந்த தடைகளை தகர்த்து பரவிக் கொண்டிருக்கிறது ஒமைக்ரான்.
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் மட்டுமே இதுவரை 246 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 86 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் வகை தொற்று அங்கு உறுதியாகி உள்ளதாம்.
ஒமைக்ரான் தொற்றால் நேற்றுவரை 160 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலே ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 86 என உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டன் நாட்டில் உறுதி செய்யப்பட்ட முந்தைய ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையுடன் இன்றைய ஒரு நாள் பாதிப்பு 50 சதவிகிதமாக கூடியுள்ளது. இது சங்கடத்தை கொடுப்பதாக சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த 86 பேரில் 68 பேர் இங்கிலாந்தையும், 18 பேர் ஸ்காட்லாந்தையும் சார்ந்தவர்கள்.