அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதனை முன்னிட்டு அந்த நாட்டில் வழக்கமாக அதிபர் தேர்தல் நடத்தப்படும் போது அதிபர் பதவிக்காக போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே மேடையில் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவார்கள். இது அந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு வகையான தேர்தல் பிரச்சாரம் என்றும் சொல்லலாம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் விவாதத்தின் போது அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் அவரது முன்னாள் உதவியாளர் Mark Meadows. இதனை அவரது ‘The Chief’s Chief’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ட்ரம்புக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இருந்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை பெற்ற அவர் வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக விவாதத்திலும் பங்கேற்றார் அவர் என மார்க் தெரிவித்துள்ளார்.
அந்த விவாத நிகழ்வு நடந்து முடிந்த மூன்று நாளில் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. பின்னர் இரண்டாவது விவாத நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
“முதல் விவாத நிகழ்விற்கு முன்னதாகவும், நிகழ்வின் போதும் எனக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக சொல்லப்பட்டுள்ள செய்தி போலியானது. விவாதத்திற்கு முன்னதாக எனக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கு சான்று மருத்துவ பரிசோதனையின் முடிவுகள்தான்” என ட்ரம்ப் தன் மீதான இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : ‘ஆப்’ இன்றி அமையா உலகு 12: Friends2Support – ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப்