டிசம்பர் 7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என விதியில் திருத்தம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நி்றைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் ஆன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியான அடிப்படை உறுப்பினர்களாக கருதப்படுவார்கள் என கூறப்படுகிறது.
“தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை!” – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் இதுவரையில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 477 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. விமான பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை வழங்கப்படும். ஒமிக்ரான் பாதிப்பை ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் மூலமும் கண்டறியலாம்” என்றார்.
தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது!
வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தாழ்வு மண்டலமாக வலுபெற்ற பின்னர் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுபெறும். இந்த ஜாவத் புயல், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.