மாதத்தின் முதல் நாள் மற்றும் ‘ஸ்பாட் முன்பதிவு’ என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் வராமல் இருந்தால் முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு முன்பதிவு செய்யாத பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர்.
அதோடு வழக்கமாக தமிழ், மலையாள, ஆங்கில மாதத்தின் முதல் நாள் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு 2022 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். பக்தர்கள் வழக்கம்போல சபரிமலையின் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர்., பரிசோதனையின் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும் ஐயப்ப பக்தர்களுக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்வம் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.