“அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்!’’ – பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் தேதி நரை நடைபெறவிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். நாட்டின் குடிமக்கள் ஆக்கபூர்வமான அமர்வை விரும்புகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க எங்கள் அரசு தயாராக இருக்கிறது. நாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து, நடவடிக்கைகளின் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும்” என்றவர், கொரோனா வைரஸின் புதிய வேரின்ட்-ஆன ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர் மழை… 25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தென்காசி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மேலும் சேலம், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்கள் மழை தொடரலாம் எனக் கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் அருகே லேசான நில அதிர்வு!
வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது எனத் தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதிகாலை 4:17 மணிக்கு ரிக்டர் அளவில் 3.6 என்ற அளவில் நில அதிர்வு உணரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.