ரயில் மோதி உயிரிழந்த யானைகளில் ஒன்று கருவுற்று இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து கோவை வனப்பகுதியை நோக்கி 25 வயது பெண் காட்டு யானை, இரண்டு குட்டிகளுடன் வந்தது. மூன்று யானைகளும் நவக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வழியாக சென்னை செல்லும், சென்னை மெயில் விரைவு ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது மோதியது. இதில் 2 குட்டிகள் உட்பட 3 யானைகளும் உயிரிழந்தன. ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் விபத்து குறித்து உடனடியாக பாலக்காடு ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதே போல், மதுக்கரை வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மூன்று யானைகளுக்கும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். அதன்படி நடைபெற்ற பிரதே பரிசோதனையில் உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது உறுதி செய்யப்பட்டது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.